தமிழ் சினிமா

அண்ணி ஜோதிகாவுக்காக ‘ராட்சசி’ படத்தில் பாடிய பிருந்தா சிவகுமார்

செய்திப்பிரிவு

ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் பிருந்தா சிவகுமார்.

‘காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகா நடித்த படம் ‘ராட்சசி’. அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி, விஜே அகல்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில், ‘நீ என் நண்பனே’ எனத் தொடங்கும் பாடலை, சூர்யா - கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

கடந்த வருடம் வெளியான ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் தீம் பாடலை, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உடன் இணைந்து பாடினார் பிருந்தா. இதுதான் அவர் பாடிய முதல் பாடல். அதைத் தொடர்ந்து தற்போது ‘ராட்சசி’ படத்திலும் பாடியுள்ளார்.

கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார். இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

‘ராட்சசி’ படத்தைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் ஜோதிகா.

SCROLL FOR NEXT