தனுஷ் முயற்சியால், செல்வராகவன் படத்திற்காக ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும், இசையமைப்பாளர் யுவனும் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.
செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு வியாபார ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. அப்படத்தை தயாரித்த பி.வி.பி சினிமாஸோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடால், செல்வராகவன் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
தற்போது அண்ணனுக்கு கை கொடுத்திருக்கிறார் தம்பி தனுஷ். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.
இப்படத்திற்கு 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' கூட்டணியான இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் யுவன் மூவரும் மீண்டும் இணைகிறார்கள். இதனை தனுஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து தனுஷ், "வுண்டர்பார் நிறுவனம் மூலம் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு காத்திருங்கள்" என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் பழைய கூட்டணி இணைந்திருப்பது, செல்வராகவன் படத்தின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.