தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த சர்ச்சை; தவறாக அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட சிறப்பு சலுகை அளித்த அதிகாரி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கையில் மை வைத்து அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைமுறையில் மன்னன் என்றாலும் மந்திரி என்றாலும், சாதாரணக் குடிமகன் என்றாலும் அனைவருக்கும் ஒரே நடைமுறைதான் என்கிறது தேர்தல் விதி. விஐபிக்களுக்கு தனி அந்தஸ்து, விவசாயிக்கு ஒரு நடைமுறை என்பது இல்லை. அனைவரும் வாக்காளர்களாகத்தான் பார்க்கப்படுவர். அனைவருக்கும் ஒரே விதிதான்.

கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்கெடுப்பு நடந்தது. காலை முதலே வெயிலைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உட்பட பல பிரமுகர்கள் வாக்குச்சாவடி சென்று வாக்களித்தனர்.

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க மனைவியுடன் வந்தார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் உள்ள 303 எண்ணில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை.

வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் அவர் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர் வாக்களிக்க முடியவில்லை.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இதே வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து வாக்களித்தேன் என்று சிவகார்த்திகேயன் வாக்குவாதம் செய்தார்.

பல முறை வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு சோதிக்கச் சொன்னோம். அப்போதெல்லாம் மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது வந்து பெயர் இல்லை என்றால் எப்படி என வாக்குச்சாவடி அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் சிவகார்த்திகேயன் திரும்பிச் சென்றார்.

இதேபோன்று நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், நடிகை சோனியா போஸ், டிரம்ஸ் சிவமணி போன்றவர்களுக்கும் வாக்கு இல்லை. நடிகர் ஸ்ரீகாந்துக்கும் வாக்கு இல்லை. ஆனால் அவர் கையில் மை மட்டும் வைத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை என செய்தி வெளியானது. அவர் மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவருக்கு சிறப்புச் சலுகை கொடுத்து கைரேகை பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

இதை அங்கிருந்த அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் சிலர் ஆட்சேபித்துள்ளனர். இந்நிலையில் வாக்களித்துவிட்டுச் சென்ற சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வாக்களித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.

சிவகார்த்திகேயன் தேர்தல் அதிகாரியிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும், பின்னர், டிஆர்ஓ அங்கிருந்த பூத் ஏஜெண்டுகளிடம் பேசி சமாதானப்படுத்தி. சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, சிவகார்த்திகேயன்  பெயர் எழுதப்பட்டு வாக்களிக்க அனுமதித்ததாகவும் தகவல் வெளியானது.

நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்த சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுவும் சர்ச்சையாகி வருகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் சிவகார்த்திகேயனுக்கு விதியை மீறி வாக்களிக்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் எப்படி வாக்களித்தார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி, ''அவ்வாறு அனுமதித்தது தவறு. சிவகார்த்திகேயனுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் எப்படி வாக்களிக்க அனுமதித்தார்கள் என்று கேட்டுள்ளோம். வாக்களிக்க அனுமதித்தது தவறு. வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

என்ன நடைமுறையை அங்குள்ள வாக்குச்சாவடி அதிகாரி கடைபிடித்தார் என்று கேட்டுள்ளோம். விரைவில் நடவடிக்கை வரும். அதேபோன்று நடிகர் ஸ்ரீகாந்த் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டது. அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. மை வைக்க யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்மீதும் தவறிருந்தால் நடவடிக்கை வரும்'' என்று தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் கள்ள ஓட்டு போட்டதாக கருதலாமா? நடவடிக்கை வருமா என்று கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த சத்யபிரதா சாஹு, ''வாக்காளர்கள் வாக்களிக்கும் மனநிலையில் ஆர்வத்துடன் வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் கேட்க அவர்களுக்கு உரிமை உள்ளது. சிவகார்த்திகேயனும் அதைத்தான் செய்தார்.

ஆனால், அதிகாரிகளுக்கு வாக்களிக்கும் நடைமுறை குறித்து நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். அதை மீறி விதியை மீறி அனுமதித்துள்ளனர். இது அதிகாரிகளின் தவறு, வாக்காளரின் தவறல்ல'' என்று தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT