நமது ராணுவ வீரர்களையும், விமானப்படையும் வைத்து ஓட்டுக் கேட்பது வெட்கக்கேடு என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி பிரதமர் மோடி மகாராஷ்டிராவின் லாட்டுர் மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், முதல் முறையாக ஓட்டுப் போடும் இளைஞர்களை குறிவைத்துப் பேசினார்.
பேசுகையில், "உங்கள் முதல் ஓட்டை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா?, புலவாமா தாக்குதலில் மரணத்திவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா?" என்று குறிப்பிட்டார். பிரதமரின் இந்தப் பேச்சு வழக்கம் போல சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தொடர்ந்து பாஜக மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "இறந்து போன போர் வீரர்களை வைத்து, நமது விமானப் படையை வைத்து ஓட்டுக் கேட்கிறார். ஏதோ நமது படைகள் இவருக்கும் இவரது கட்சிக்கும் மட்டுமே வேலை செய்வதைப் போல. தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இதை விட தகுதி வாய்ந்தவர்கள் தேவை. ஜனநாயகம் என்பது மாற்றப்படுகிறது. என்ன ஒரு வெட்கக் கேடு" என்று கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.