அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படியொரு கதை அமைய வேண்டும் எனக் காத்திருக்கிறேன் என்று நடிகர் ஜீவா தெரிவித்தார்.
நடிகர் ஜீவா கீ எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
கீ படம். மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும். ஸ்மார்ட் போன்களால் என்னென்ன ஆபத்துகள் நமக்கு ஏற்படுகின்றன, நம்முடைய அடிப்படை தகவல்களையெல்லாம் ஸ்மார்ட் போன்களைக் கொண்டு எப்படி திருடுகிறார்கள் என்பதையெல்லாம் சொல்லும் படமாக இருக்கும்.
இன்றைக்கு குழந்தைகள் கூட, ஸ்மார்ட் போன் வைத்து விளையாடுகிறார்கள். வெயிலில், மண்ணில் விளையாடிய காலமெல்லாம் போய்விட்டது. இதையெல்லாம் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
‘ஜிக்கான் ஜிக்கான் நண்பர்கள்’ பற்றி இயக்குநரிடம்தான் கேட்கவேண்டும். ’எஸ்.எம்.எஸ்.’ படத்தில் சந்தானம் போல, ’சங்கிலிபுங்கிலி கதவைத் திற’ படத்தில் சூரி போல, இந்தப் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிப்பையும் காமெடியையும் வழங்கியிருக்கிறார். ஆனாலும் கூட இப்போது வரை சந்தானத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.
இயக்குநர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டுபோனேன். ஜிப்ஸி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமையவேண்டும் என்று காத்திருக்கிறேன்.
இவ்வாறு ஜீவா தெரிவித்தார்.