'புதுப்பேட்டை' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் தனுஷுக்கு நாயகியாக சிநேகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புதுப்பேட்டை'. 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது வரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
'புதுப்பேட்டை' படத்துக்குப் பிறகு தனுஷ் - சிநேகா இணைந்து நடிக்கவே இல்லை. தற்போது துரை.செந்தில்குமார் இயக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 6-ம் தேதி முதல் தொடங்குகிறது. குற்றாலத்தில் நடைபெறவுள்ள முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ், சிநேகா சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தான் படமாக்கவுள்ளது படக்குழு.
'கொடி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அப்படத்தைப் போலவே இப்படத்தின் கதையை இரட்டை நாயகர்கள் கதையாகவே உருவாக்கியுள்ளார். ஆனால், முந்தைய படம் போன்று அண்ணன் - தம்பியாக அல்லாமல் தந்தை - மகன் கதையாக உருவாக்கியுள்ளார்.
இதில் அப்பா தனுஷுக்குத் தான் நாயகியாக நடிக்கவுள்ளார் சிநேகா. இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விவேக்-மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரியவுள்ளார். இன்னொரு தனுஷுக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த 'அசுரன்' படமும் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்தே துரை.செந்தில்குமார் படத்துக்கு தேதிகள் கொடுத்துள்ளார் தனுஷ்