'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் அவரால் இதர படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போது, மீண்டும் இப்படத்தில் நடிக்க வடிவேலு சம்மதம் தெரிவித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தயாரிப்பாளர் ஷங்கர், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் வடிவேலு மூவருமே அமர்ந்து பேசி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளனர்.
இந்நிலையில், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது, "முற்றிலும் பொய்யான தகவல். அப்படியொரு எண்ணம் யாருக்குமே இல்லை.
அவரை நடிக்க வைத்தால் இதுவரை எடுத்த காட்சிகள் அனைத்தையுமே மறுபடியும் ஷூட் செய்ய வேண்டும். இப்போதைக்கு வடிவேலுவிடம் மட்டுமே பேசி வருகிறோம். அவரைத்தாண்டி வேறு யாரையும் இப்படத்தில் நடிக்க வைக்கும் எண்ணமில்லை" என்று தெரிவித்தார்கள்.