சண்டைக் கலைஞர்களுக்கு அஜித் கொடுத்த மரியாதையை மகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார் திலீப் சுப்பராயன்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜனவரி 10-ம் தேதி 'விஸ்வாசம்' வெளிவரவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்காட்சிகளை வடிவமைத்துள்ளார் திலீப் சுப்பராயன்
'விஸ்வாசம்' படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து திலீப் சுப்பராயன் கூறியிருப்பதாவது:
''படத்தில் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் ஒவ்வொரு கான்செப்ட்டில் இருந்ததால், எங்களுக்கு சவால்களை விட, நிறைய பொறுப்புகள் இருந்தன. உண்மையில், ஒவ்வொரு சண்டைக்காட்சியும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் ஒரு புள்ளியாக இருக்கும். எனவே அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.
கதையை எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது. இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்.
அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக் கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் எங்ககளுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். எப்போதும் எங்கள் முடிவுகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்.
ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியைப் பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். அதைத் திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.
கழிப்பறையில் மிகவும் குறைவாக இருக்கும் இடத்தில் மொத்த சண்டைக்காட்சியும் வடிவமைத்தேன். அதில் நிறைய சவால்கள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அது மிகவும் வழுக்கும் டைல்ஸ் தரையாக, மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அந்தத் தரையை காய வைத்தால் அடுத்த காட்சிக்கான தொடக்கம் தவறிவிடும் என்பதால் அதை நாங்கள் அப்படியே தொடர வேண்டியிருந்தது.
நடக்கவே சிரமப்படும் தரையில் , சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் சூழ்நிலையை நினைத்துப் பார்க்கவே சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த குழுவும் உறுதியுடன் இருந்தது, அதைச் சிறப்பாக நிறைவேற்ற எங்களுக்கு உதவியது''.
இவ்வாறு திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்