அஜித் நடிப்பில் ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ படங்களை இயக்கிய சரண், தற்போது ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், துல்கர் சல்மானுடன் பணியாற்றுபவராக மிகச்சிறிய வேடத்தில் நடித்தவர் ஆரவ். அதன்பிறகு ‘சைத்தான்’ படத்தில் முகம் தெரிகிற வேடத்தில் நடித்தார். ‘ஒரு கப் காஃபி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம், மிகப்பெரிய அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது. அதுவும் ஆரவ் - ஓவியா காதல், இன்றளவும் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று, டைட்டிலை தட்டிச் சென்றதும் ஆரவ் தான். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பார், மிகப்பெரிய உயரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ‘ராஜ பீமா’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் ஆரவ். நரேஷ் சம்பத் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சரண், ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், கிட்டத்தட்ட ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ போன்று இருக்கும் என்கிறார்கள். சுரபி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஆரவ் ஜோடியாக காவ்யா தாபர் நடிக்கிறார். மேலும், ராதிகா சரத்குமார், யோகி பாபு, நாசர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.