ராதிகா இரண்டு வேடங்களில் நடித்த சீரியல் ‘வாணி ராணி’. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சீரியல், இன்றுடன் (டிசம்பர் 8) நிறைவடைகிறது. எனவே, அடுத்ததாக ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் நடித்துள்ளார் ராதிகா.
ராதிகாவின் ரடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘சந்திரகுமாரி’ சீரியல், பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. இந்த சீரியலில், 7 வேடங்களில் நடிக்கிறார் ராதிகா. சரித்திரமும் சமூகமும் மாறி மாறிப் பயணிக்கும் வித்தியாசமான சீரியலாக இது உருவாகியுள்ளது.
சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு இந்த சீரியல் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அரச குடும்பம் சார்ந்த கதையை, ‘பாட்ஷா’ படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார்.
‘தாமிரபரணி’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிற்பி இசையமைக்கும் இந்த சீரியலுக்கு, பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்த சீரியல் தயாராகியுள்ளது. வருகிற திங்கள் முதல் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ‘சந்திரகுமாரி’ ஒளிபரப்பாகும்.