நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமலாபால்.
'அதோ அந்த பறவை போல', 'ஆடை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். தற்போது 'ஆடை' படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் நாயகியை முன்னிலைப்படுத்திய கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமலாபால். அபிலாஷ் பிள்ளை எழுதிய இக்கதையை அனூப் பணிக்கர் இயக்கவுள்ளார்.
இதில் தடயவியல் நிபுணராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமலாபால். தடயவியல் புலனாய்வு த்ரில்லர் பாணியில் ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளைச் சுற்றி நடக்கும் கதை.
மேலும், இப்படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் பி. உமாதத்தன் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள் பேசி இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தில் 'ராட்சசன்' படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். இப்படத்தில் அமலாபாலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது.