ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் 2018 தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தின் சில காட்சிகளுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனால் சர்ச்சையாகி சில காட்சிகளை நீக்கியது படக்குழு.
மேலும், படம் வெளியாகும் முன்பு கதை சர்ச்சையில் சிக்கியது 'சர்கார்'. புகார் கூறிய வருண் ராஜேந்திரனின் பெயரையும் படத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்த இரண்டு விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது சன் பிக்சர்ஸ். இதனால், அடுத்ததாக அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்ததையும் நிறுத்தி வைத்தது.
இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, உடனடியாக லைகாவிடம் கூறினார். அடுத்ததாக மீண்டும் ரஜினி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் என்றவுடன் தயாரிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய படங்களின் வெளியீட்டு பணிகள் முடிவடைந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.