தமிழ் சினிமா

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.10 கோடி உதவி: கேரள அரசுக்கு விஜய் சேதுபதி நன்றி

ஸ்கிரீனன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவ ரூ.10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதுவரை 60 பேர்வரை உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசியலைக் கடந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதியும், 14 லாரிகளில் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைப்பதாகவும், 72 மின் ஊழியர்கள் சீரமைப்புப் பணிக்காக வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் இந்த உதவி தொடர்பாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனின் கோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்'' என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT