கார்த்திக் சுப்பராஜின் புதிய படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
’ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அடுத்ததாக திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கவுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அப்படத்தினைத் தான் இப்போது மதுரையில் கார்த்திக் சுப்பராஜ் படப்பூஜையுடன் தொடங்கியிருக்கிறார்.
இப்படத்தினை சீக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்துடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் புதிய படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. இதற்கு ஒளிப்பதிவாளராக திருநாவுக்கரசு பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர். “பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.