துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்கு இசையமைத்து வருகிறது ‘மசாலா காஃபி’ இசைக்குழு
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 25-வது படம் தமிழ் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். ரீத்து வர்மா நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமலே படக்குழு படப்பிடிப்பை நடத்தி வந்தது.
தற்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்கு ‘மசாலா காஃபி’ இசைக்குழு இசையமைத்து வருவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழில் வெளியான ‘உறியடி’ படத்துக்கு 3 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது இந்த இசைக்குழு. மேலும் பிஜாய் நம்பியார் இயக்கிய ‘சோலோ’ படத்திலும் பணிபுரிந்திருக்கிறது.
முதன் முறையாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துக்குமே ‘மசாலா காஃபி’ இசைக்குழு பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.