தமிழ் சினிமா

‘வீர தீர சூரன்’ படத்துக்கு வரவேற்பு: விக்ரம் நன்றி

ஸ்டார்க்கர்

‘வீர தீர சூரன்’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு விக்ரம் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் இதுவரை உலகளவில் 50 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் விக்ரம், “எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸான, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்க முடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விஷயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள்.

என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சுரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வீர தீர சூரன்’. ஷிபு தமீன்ஸ் தயாரித்த இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ‘வீர தீர சூரன் பார்ட் 2’ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

SCROLL FOR NEXT