தமிழ் சினிமா

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள்: த்ரிஷா கவலை

ஸ்கிரீனன்

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் தொடர்பாக ‘மோகினி’ பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷா கவலை தெரிவித்தார்.

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மோகினி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 27-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு த்ரிஷா பேசியதாவது:

மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் இது தான். தினமும் காலையில் எழுந்து செய்தித்தாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும்.

‘மோகினி’ படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்துக்காக எவ்வளவு உழைத்திருக்கிறோம் என்று எங்களுக்குத் தான் தெரியும். வெளிநாடுகளில் சுமார் 90% படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் பேய் படமாகும். பேய் படங்கள் எப்போதுமே எதிர்பார்ப்புக்குரிய வகையில் இருக்கும். ஆகையால், நல்ல கதை அமைந்தால் பண்ணுவேன்.

பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை செய்திகளை படிக்கும் போது மிகவும் வருந்துவேன். முக்கியமாக அதில் குழந்தைகள் சம்பந்தப்பட்டு இருந்தால் மிகவும் வருந்தத்தக்கது. இச்சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு த்ரிஷா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT