தமிழ் சினிமா

‘ரிப்பீட்டு...’ - சிம்புவின் ‘மாநாடு’ ரீரிலீஸ்!

செல்வ சூர்யா

நடிகர் சிம்புவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நாளை (ஜன.31) திரையரங்குகளில் ரீரிலிஸ் செய்யப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021-ல் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியிருந்தார். தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு சிம்பு சுவைத்த வெற்றிப் படம் இது. ‘டைம் லூப்’ ஜானரில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை பார்த்தது. குறிப்பாக, நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். சிம்புவுக்கு பிப்ரவரி 3-ம் தேதி பிறந்தநாள், இதையொட்டி, ‘மாநாடு’ திரைப்படம் நாளை (ஜன 31) முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.

‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகப் போவதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிம்பு 2021-ல் படத்தின் டப்பிங்போது வெளியிட்ட வீடியோவை டேக் செய்துள்ளார்.

இதனிடையே, ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில், “மகிழ்ச்சியான செய்தி. எஸ்.டி.ஆரின் பிறந்தநாளை கொண்டாட மீண்டும் வருகிறது மாநாடு” என கூறி ரீரிலிஸை உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவை பகிர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா “நாளை முதல் மீண்டும் மாநாடு (வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு ) அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா. நன்றி வெங்கட் பிரபு சார் அண்ட் டீம்” என பதிவிட்டுள்ளார்.

again soon maanaadu rerelease https://t.co/Z75RTuWpM9

SCROLL FOR NEXT