தமிழ் சினிமா

“ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்” - விஜய்

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? - மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார். திட்டமிட்ட படி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT