சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ், நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக ரூ.1 கோடி நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க கட்டிடம்: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமை பெற ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ரூ.1 கோடி, நடிகர் விஜய் ரூ.1 கோடி, சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம், நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கியுள்ளனர். தற்போது தனுஷ் ரூ.1 கோடி அளித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.