மராத்திப் படமான ‘வஹினிஞ்சியா பங்கடியா’வைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம் ‘மங்கையர் திலகம்’. எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். ஆலம் ஆரா (இந்தி), பக்த பிரகலாதா (தெலுங்கு), காளிதாஸ் (தமிழ், தெலுங்கு) என 3 வெவ்வேறு மொழிகளின் முதல், பேசும் படங்களில் நடித்த சிறப்பைப் பெற்றவர் இவர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட இவர் படங்களுக்கு அப்போது வரவேற்பு உண்டு.
‘மங்கையர் திலகம்’ படத்தில் சூப்பர் ஜோடி என்று வர்ணிக்கப்படும் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடிக்கவில்லை. மாறாக சிவாஜிக்கு அண்ணியாகவும் எஸ்.வி.சுப்பையாவுக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார் பத்மினி. ராகினி, என்.என்.ராஜம், தங்கவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். அன்னையின் பெருமை போல அண்ணியின் பெருமை பேசிய படம் இது. பிளாஷ்பேக் உத்தியில் கதையை ஆரம்பித்திருப்பார்கள்.
வைத்யா பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வலம்புரி சோமநாதன், ஜி.ராமகிருஷ்ணன், டி.நாகலிங்கம் வசனம் எழுதியிருந்தனர். எஸ்.தக்ஷிணாமூர்த்தி இசை அமைத்திருந்தார். கண்ணதாசன், புரட்சிதாசன், மருதகாசி பாடல்கள் எழுதியிருந்தனர். மராத்தி படத்தில் இடம்பெற்ற மெட்டின் அடிப்படையில் ஒரு தாலாட்டு பாடல் எழுத வேண்டும். அதை எழுத கண்ணதாசனை முதலில் அழைத்தார்கள். அப்போது அவருக்கிருந்தமனநிலையில் சரியான வரிகளை எழுத முடியவில்லை. பிறகு மருதகாசியை எழுத வைத்தார்களாம். அவர் எழுதிய அந்தப் பாடல், ‘நீலவண்ணகண்ணா வாடா, நீயொரு முத்தம் தாடா’. இந்தப் படத்தின் அடையாளமாகவே இந்தப் பாடல் அமைந்துவிட்டது. ‘ஒருமுறைதான் வரும் கதை பல கூறும்’, ‘பாக்கியவதி நான் பாக்கியவதி’ உட்பட சில பாடல்கள் ஹிட்டாயின. 1955-ம் ஆண்டு இதே நாளில் இந்தப் படம் வெளியானது.