தமிழ் சினிமா

முதல் அறிவிப்பிலேயே கவனம் ஈர்த்த தமிழ் படம் 2.O படக்குழு

ஸ்கிரீனன்

'தமிழ் படம் 2.O' படக்குழுவினர் தங்களுடைய முதல் அறிவிப்பிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.

'தமிழ் படம்' படத்தின் 2-ம் பாகத்திற்கு 'தமிழ்படம் 2.O' என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தார்.

அதன்படி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். 'தமிழ்படம் 2.O' வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிடுவதில் சந்தோஷப்படுகிறேன்" என்று கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அப்போஸ்டர் தான் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. 'தமிழ்படம் 2.O' போலீஸ் அத்தியாயம் என்று படத்தின் லோகோ வடிவமைக்கப்பட்டு இருந்தது. மே 25-ம் தேதி பட வெளியீடு என்றும், மே 26-ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியீடு என்று படத்தின் போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும், ஆன்லைன் திருட்டு பங்குதாரர் (Online Piracy Partner) என்று தமிழ் ராக்கர்ஸ் லோகோ போட்டுள்ளார்கள்.

'தமிழ் படம்' திரையுலகில் வெளியான முன்னணி படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து எடுத்த படமாகும். அதன் 2-ம் பாகத்தின் போஸ்டர் வடிவமைப்பிலேயே படக்குழு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இப்படத்தின் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். 'தமிழ்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

SCROLL FOR NEXT