தமிழ் சினிமா

உணவகத்தில் நடக்கும் கதை ‘பீட்சா 3’

செய்திப்பிரிவு

சென்னை: திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி. வி.குமார் தயாரித்துள்ள படம், ‘பீட்சா 3- தி மம்மி’. மோகன் கோவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில், அஷ்வின், பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், கவிதா பாரதி, குரேஷி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்ராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநர் மோகன் கோவிந்த் கூறியதாவது: இது, ஒர் உணவகத்தில் நடக்கும் திகில் கதை. ஹீரோ அஷ்வின், நளன் என்ற செஃப் வேடத்தில் வருகிறார். அந்த உணவகத்தை அவர்தான் நடத்துகிறார். அங்கு நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. வழக்கமாக, திகில் படம் என்றால் ஒரு கட்டிடத்தில் நடக்கும் கதையாக உருவாக்கி இருப்பார்கள். இதில் அப்படி இருக்காது. பழி வாங்கும் கதைதான் என்றாலும் அதை யார் செய்கிறார் என்பது யூகிக்க முடியாததாக இருக்கும். பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளோம். இசையில் அருண்ராஜ் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு மோகன் கோவிந்த் கூறினார்

SCROLL FOR NEXT