தமிழ் சினிமா

விழித்திரு டி.ஆர்.சர்ச்சை: மவுனம் கலைத்த தன்ஷிகா

செய்திப்பிரிவு

'விழித்திரு' பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன்னை டி.ராஜேந்திர் சாடியது தொடர்பாக முதன்முறையாக தன்ஷிகா மவுனம் கலைத்துள்ளார்.

'விழித்திரு' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையிலேயே நடிகை தன்ஷிகாவை டி.ராஜேந்தர் கடுமையாகச் சாடினார். தன்ஷிகா மன்னிப்பு கோரியும்கூட விடாமல் திட்டித்தீர்த்தார் டி.ராஜேந்தர். இதனால்,  பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நடிகை தன்ஷிகா மேடையில் கண் கலங்கினார். இதனைத் தொடர்ந்து டி.ராஜேந்தர் மீது இணையத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட நடிகை தன்ஷிகாவோ எதுவுமே கூறவில்லை. இது குறித்த ஊடக கேள்விகளையும் அவர் தொடர்ந்து தவிர்த்துவந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த 'விழித்திரு' திறனாய்வுக் கூட்டத்தில் பேசிய தன்ஷிகா, "டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார்.

எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ,அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே, அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன்.

அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது.

அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத் துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்சினையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT