இந்தியத் திரையிசை வரலாற்றில் ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அன்போடு அழைக்கப்படும் இசைப் பேரரசி எஸ்.ஜானகி நேற்று (ஜூலை 11) மறைந்தார். தனது காந்தக் குரலால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
பன்மொழித் திறமையோடு ஆயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ள இவர், நான்கு தேசிய விருதுகளையும், 33 மாநில அரசு விருதுகளையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அசாத்தியக் குரல் வளம், துல்லியமான உச்சரிப்பு, நளினமான உணர்வுகளைக் குரலிலேயே கடத்தும் வித்தையில் இவருக்கு நிகர் இவரே. சோகம், மகிழ்ச்சி, கிராமியம் என அனைத்து பாணிகளிலும் தனித்து நின்று முத்திரைப் பதித்த எஸ்.ஜானகியின் மனதை மயக்கும் 10 ஆகச் சிறந்த பாடல்களின் தொகுப்பு இதோ...
எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் ஜானகி பாடிய இந்தப் பாடல் ஒரு காருகுறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு இணையாக எஸ்.ஜானகி தனது குரலை ஒலிக்க செய்திருப்பார். நாதஸ்வரத்தின் நுணுக்கமான சங்கதிகளையும், அதிர்வுகளையும் மனிதக் குரலில் அப்படியே பிரதிபலிப்பது என்பது அசாத்தியம். அதைத் தனது அற்புதமான குரல் வளத்தால் மிக நேர்த்தியாக ஜானகி பாடியிருப்பார். இப்பாடல் அவரின் ஆரம்பகால இசை மேதைமையை பறைசாற்றியது.
'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' (அன்னக்கிளி)
இளையராஜா திரையுலகில் அறிமுகமான இப்படத்தில் ஜானகி பாடிய அற்புதமான கிராமியப் பாடல் இது. காதலனின் பிரிவால் வாடும் ஒரு பெண்ணின் ஏகாந்தத்தையும் துயரத்தையும் தனது குரல் குழைவால் கேட்பவர் நெஞ்சில் பாரமாக இறக்கியிருப்பார். நாட்டுப்புற இசையின் ஆன்மாவைத் தனது குரலில் கொண்டு வந்து, கேட்பவர் உருகும் வண்ணம் பாடியிருப்பது ஜானகியின் தனிச்சிறப்பு.
தமிழ் திரையிசையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய இளையராஜாவின் இசைப் பயணத்துக்கு ஜானகியின் குரல் மிகப் பெரிய தூணாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
‘செந்தூரப் பூவே’ (16 வயதினிலே)
இளையராஜாவின் இசையில் ஜானகி பாடிய இப்பாடல் தமிழ் திரையிசை வரலாற்றில் ஓர் அழியாத காவியம். அண்மையில் மறைந்த பாரதிராஜாவின் முதல் படமான இதில், வெள்ளந்தித் தனம் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் காதல் தவிப்பைத் தனது மென்மையான குரலால் அச்சு அசலாகக் கடத்தியிருப்பார்
எஸ்.ஜானகி. பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த ஆலாபனையும், சரணங்களில் உள்ள நுணுக்கமான சங்கதிகளும் ஜானகியின் குரல் வளத்துக்கு சான்றாகும். இப்பாடலுக்காக ஜானகிக்குத் தேசிய விருது கிடைத்தது. எத்தனையோ ஆண்டுகள் கடந்தாலும் காற்றில் இப்பாடல் ஒலிக்கும்போது நம் மனதுக்குள் ஒரு தென்றல் வீசுவதை உணர முடியும்.
‘ராசாவே உன்னை நம்பி’ (முதல் மரியாதை)
பாரதிராஜா + இளையராஜா கூட்டணியில் உருவான இப்படத்தில், ஜானகி பாடிய இப்பாடல் காதலின் தவிப்பையும் விவரிக்கும் வண்ணம் இசையமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெண்ணின் காதலையும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு இடையே அவதிப்படும் அவளது மன வேதனையையும் தனது மெல்லிய குரல் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ஜானகி. பாடலின் சரணங்களில் அவர் காட்டும் அந்த அபாரமான மாடுலேஷன் கேட்பவர் நெஞ்சை உலுக்கும் வல்லமை கொண்டது.
‘ஊரு சனம் தூங்கிருச்சு’ (மெல்ல திறந்தது கதவு)
எம்.எஸ்.விஸ்வநாதன் + இளையராஜா இணைந்து இசையமைத்த இப்பாடலில், ஜானகியில் குரல் நள்ளிரவின் ஏகாந்தத்தையும் சோகத்தையும் அப்படியே பிரதிபலிப்பதை நாம் உணர முடியும். ஒட்டுமொத்த ஊரும் தூங்கும் வேளையில், தன் துயரத்தோடு தனித்திருக்கும் ஒரு பெண்ணின் குரலாக ஜானகி அற்புதம் செய்திருப்பார்.
மிகவும் குறைந்த இசைக் கருவிகளின் பின்னணியில், ஜானகியின் காந்தக் குரல் மட்டுமே ஒட்டுமொத்தப் பாடலையும் ஆக்கிரமித்திருக்கும். பாடலின் இடையே அவர் வெளிப்படுத்தும் ஏக்கம் கலந்த பாவனைகள் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இன்றும் பலரின் இரவு நேரத்துத் துணையாக இப்பாடல் விளங்குகிறது.
‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ (உயிரே)
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஜானகி பாடிய இப்பாடல் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு இளம் பெண்ணின் காதலையும், அவளது நெஞ்சுக்குள் எழும் ஆசைகளையும் தனது குரலால் வெளிப்படுத்தியிருப்பார். பாடலின் பல்லவியிலும் சரணங்களிலும் வரும் அந்த அதிவேகமான சங்கதிகளைத் தனது முதிர்ந்த வயதிலும் மிக லாவகமாகப் பாடி அசத்தியிருப்பார் ஜானகி.
மேற்கத்திய இசைக்கு ஏற்பத் தன் குரலை வளைத்து, ரஹ்மானின் புதுமையான இசைக்குத் தகுந்தபடி பரிமாணத்தைக் காட்டியிருப்பார். இந்த பாடலின் மூலம் இளைய தலைமுறையினரையும் தன் வசீகரக் குரலால் கட்டிப்போட்டிருந்தார்.
‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி)
ராஜாவின் இசையில், ஜானகி பாடிய ஆகச்சிறந்த சோக பாடல்களில் இது முக்கியமான பாடல் என்று சொல்லலாம். காதலனைப் பிரிந்த ஒரு பெண்ணின் தவிப்பை தனது குரலின் மூலமாகவே கேட்பவர்களின் கண்களில் கண்ணீராக வரவழைத்திருப்பார். பாடலின் ஆரம்பத்தில் வரும் நீளமான ஆலாபனை நம் மனதை எங்கோ இழுத்துச் செல்லும்.
மிகவும் மென்மையான சுருதியில் இப்பாடலை ஜானகி கையாண்ட விதம் அசாத்தியமானது. குரலில் சோகத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு, எந்த இடத்திலும் சுருதி விலகாமல் பாடியிருப்பது ஜானகியின் திறமைக்கு சான்று. ராஜாவின் இசையில் ஜானகியின் குரல் இப்பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம் மனதை ஏதோ ஒரு இனம் புரியாத சோகத்தில் ஆழ்த்தி விடும்.
‘சின்னச் சின்ன வண்ணக் குயில்’ (மௌன ராகம்)
மௌன ராகம் திரைப்படத்தில் ஜானகி பாடிய மற்றொரு அற்புதப் பாடல் இது. பாடலின் விறுவிறுப்பான மெட்டோடு அவரது குரலும் துள்ளிக் குதிக்கும். இளையராஜாவின் இசைக்கு இணையாக ஜானகியின் வசீகர குரல் இதில் பயணிக்கும். ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பிலும் அவர் காட்டியிருக்கும் நளினமும், பாவனைகளும் கேட்பவரைப் பாடலோடு ஒன்றச் செய்யும்.இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றும் இப்பாடல் நீங்கா இடம் பிடித்துள்ளது.
புத்தம் புது காலை (அலைகள் ஓய்வதில்லை)
ஒரு அழகிய காலைப் பொழுதின் புத்துணர்ச்சியையும், இயற்கையின் பேரழகையும் தன் குரலாலேயே நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் எஸ்.ஜானகி. ராஜாவின் மென்மையான இசையோடு ஜானகியின் குரல் ஒரு தென்றலைப் போல இழைந்து வரும்.
ஒரு மெல்லிய தென்றல் வருடுவது போல வார்த்தைகளின் உச்சரிப்பில் ஜானகி காட்டியிருக்கும் அமைதியும் நளினமும் பாடலுக்குப் பெரிய பலம். காலங்களைக் கடந்தும் இன்றும் பலரின் நாளை அழகாக்கும் பாடல் இது.
நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)
இளையராஜாவின் உன்னதமான இசையமைப்பில், காதலனைப் பிரிந்த ஒரு பெண்ணின் அடிமன துயரத்தையும், அவளது தவிப்பையும் ஜானகி தனது உணர்வு பூர்வமான குரலால் கேட்பவர் நெஞ்சை உலுக்கும் வண்ணம் பாடியிருப்பார்.
‘இசையை அருந்தும் சாதகப் பறவை’ என்று தொடங்கும் சரணம் நம் மனதை கனக்கச் செய்யும். பாடலின் ஒவ்வொரு வரியிலும் இழையோடும் அந்த மென்சோகத்துக்கு தன் குரலால் நியாயம் செய்திருப்பார் எஸ்.ஜானகி