தென்னிந்திய சினிமா

‘டாக்ஸிக்’ பெண்களுக்கு எதிரான படமா? - யஷ் விளக்கம்

ப்ரியா

ஹைதராபாத்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் தொடர்பான விமர்சனங்களுக்கு நடிகர் யஷ் பதிலளித்துள்ளார்.

படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே, அதில் பெண்களை சித்தரிக்கும் விதம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் இதற்கு பதிலளித்துப் பேசிய யஷ், “சமூகம் பல்வேறு கருத்துக்களைக் கூறலாம். ஆனால் உங்களது உழைப்பே உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத்தரும்.

இந்த திரைப்படத்தில் பெண்களுக்கான வலுவான குரலும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது. கதையில் ஒவ்வொரு பெண்ணும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொண்டு, தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வெற்றிபெறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன" என்று தெரிவித்தார்.

மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில நெருக்கமான காட்சிகள் குறித்துப் பேசிய அவர், அவை ஆபாசமாக சித்தரிக்கப்படவில்லை என்றும், கதையின் சூழலுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்பவே நுட்பமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, முன்பதிவு வசூல் ரூ.30 கோடியைக் கடந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

SCROLL FOR NEXT