யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’. மார்ச் மாதத்தில் வெளியாகவிருந்த இப்படத்தினை ஜூன் 4-ம் தேதி வெளியீடு என மாற்றினார்கள். ஆனால், தற்போது ஜூன் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மற்றும் உலகளாவிய வெளியீடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு தள்ளிவைக்கப்படுவதாக யஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், ‘டாக்ஸிக்’ படத்தின் டிஜிட்டல் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சில காட்சிகளில் யஷுக்கு உடன்பாடு இல்லை எனவும், இதனால் அவற்றை மீண்டும் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி யஷ் – கீது மோகன்தாஸ் இருவருக்குமே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சினைகள் அனைத்து முடிந்து, டிஜிட்டல் வியாபாரம் உள்ளிட்டவை முடிந்தால் மட்டுமே ‘டாக்ஸிக்’ வெளியாகும். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் யஷ் உடன் நடித்துள்ளனர்.