ஹைதராபாத்: 'மைசா' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் மற்றும் அதிலிருந்து மீண்டு வரும் சிகிச்சை குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியிருந்த அவர், வீட்டில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களைப் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட 3-வது காயம் இது. எனது உடல் ஒரு மனித உடல், மெஷின் அல்ல என்பதைப் போல நான் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
'மைசா' படத்தின் நடனப் படப்பிடிப்பின் போது, எனது வலது இடுப்புப் பகுதியில் காலையும் இடுப்பையும் இணைக்கும் நான்கு முக்கியத் தசைநார்களில் ஒன்று விலகிவிட்டது.
அது மீண்டும் சரியாக இணைந்தால் மட்டுமே என்னால் காலைத் தூக்க முடியும். வலி இருந்தாலும் அது தாங்க முடியாதது அல்ல. தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்குக் கொடுத்த கட்டாய ஓய்வாகவே இதைக் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' திரைப்படம் ஒரு பழங்குடியின் பெண்ணின் பின்னணியைக் கொண்ட ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகும். ராஷ்மிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் இந்த ஆண்டு திரைக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஷாஹித் கபூர், கிருதி சனோன் ஆகியோருடன் ராஷ்மிகா இணைந்து நடித்த 'காக்டெய்ல் 2' இந்தித் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.