‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, “2 வாரங்களுக்கு படத்தை திரையிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் பின்பற்றவில்லை” என்றும் தெரிவித்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக, தயாரிப்பாளர் விபுல் ஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் பி.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தனி நீதிபதி விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து இப்படம் வெளியானது.
கேரளாவில், 38 திரையரங்குகளில் மட்டுமே இப்படம் திரையிடப்பட்டுள்ளது. தெற்கு கேரளாவில் 9 திரையரங்குகளிலும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் 14 திரையரங்குகளிலும், மலபாரில் 15 திரையரங்குகளிலும் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும், திரையிடலை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேரள மாநிலம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது.
கண்ணூர் மற்றும் கொச்சியில் உள்ள திரையரங்குகளில் போராட்டம் காரணமாக நேற்று காலை காட்சி ஒத்திவைக்கப்பட்டது. பல திரையரங்குகளில் பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.