இயக்குநர் சிதம்பரம்
சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படம், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது. உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதை சிதம்பரம் இயக்கி இருந்தார்.
இதையடுத்து அவர் ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜித்து மாதவன் இதன் கதையை எழுதியுள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அவர் திலீப் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அது சர்வைவல் த்ரில்லர் கதையைக் கொண்டது என்றும் செய்திகள் வெளியாகின.
அதை மறுத்துள்ள இயக்குநர் சிதம்பரம், “இந்த வகையான தகவல்கள் எப்படி வெளிவருகின்றன என்பது தெரியவில்லை. நான் தற்போது ‘பாலன்’ படத்தின் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற எந்த நோக்கமும் எனக்கு இல்லை. நான் சர்வைவல் த்ரில்லர் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.