தென்னிந்திய சினிமா

“நெகட்டிவ் விமர்சனம் எழுதியவர்களுக்கு நன்றி” - ‘பெத்தி’ பட விழாவில் ஜெகபதி பாபு பேச்சு

ப்ரியா

ஹைதராபாத்: ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஜெகபதி பாபு நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

புச்சி பாபு சானா இயக்கத்தில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ படம், ரூ.300 கோடி வசூலை நெருங்கியுள்ளது. எனினும் படம் வெளியான முதல் நாளில் இருந்தே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக ஜான்வி கபூர் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் ஜெகபதி பாபு, “பெத்தி திரைப்படம் தற்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் ரிலீஸாகி ஒருமுறை ஜெயிப்பதே பெரிய விஷயம். ஆனால், இந்த 'பெத்தி' படத்தைப் பொறுத்தவரை, நாங்கள் இரண்டு முறை போராடி ஜெயிக்க வேண்டியிருந்தது. இரண்டு முறை ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரே ஆட்டம் இதுவாகத்தான் இருக்கும்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு திரைப்படத்தின் தலைவிதியை ரூ.300 கொடுத்து டிக்கெட் வாங்கும் சாமானிய ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். கத்தி மேல் நடப்பது போன்ற இத்தகைய சவாலான கதையை நம்பி தயாரிப்பாளரைக் கண்டுபிடிப்பது இயக்குநருக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை” என்று குறிப்பிட்டார். 

மேலும், நடிகர் ராம் சரணை 'சூப்பர்மேன்' மற்றும் 'ஹீ-மேன்' என்று அவர் பாராட்டினார். படம் குறித்த விமர்சனங்களை சாடிய ஜெகபதி பாபு, "இப்படத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் என் நன்றிகள். அதேவேளையில், படத்துக்கு மோசமான விமர்சனங்களை எழுதியவர்களுக்கு நான் இன்னும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், உங்களின் அந்த நெகட்டிவ் விமர்சனங்கள் எங்களுக்குத் தெரியாமலேயே படத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT