திருவனந்தபுரம்: ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இப்படத்தை பிப்ரவரி 27-ம் தேதி வெளியிட முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அது ‘விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை’ என்றும் கூறியது.
இதற்கிடையில், படத்தின் வெளியீட்டைத் தடை செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் இன்றே மேல் முறையீடு செய்யவுள்ளனர். நாளை (பிப்ரவரி 27-ம் தேதி) படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு இதனை மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தவுள்ளது.
காமாக்யா நாராயண் சிங் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சில பெண்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.