‘த்ரிஷ்யம் 3’ படத்தின் தெலுங்கு ரீமேக் சிக்கலில் இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது.
’த்ரிஷ்யம்’ படத்தில் தொடங்கிய கதையினை, அதன் 3-ம் பாகத்தில் முடிவடையும் என்று கூறியிருந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். தற்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மோகன்லால் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
’த்ரிஷ்யம்’ படத்தினை தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் இந்தியில் அஜய் தேவ்கான் உள்ளிட்டோர் ரீமேக்கில் நடித்திருந்தார்கள். தமிழை தவிர்த்து இதர மொழியில் ‘த்ரிஷ்யம் 2’ ரீமேக் செய்யப்பட்டது. அதே போல் ‘த்ரிஷ்யம் 3’ ரீமேக் பணிகள் இந்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் தெலுங்கில் ‘த்ரிஷ்யம் 3’ ரீமேக் சிக்கலில் இருக்கிறது. ஏனென்றால் ‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ மற்றும் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ உள்ளிட்ட படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் வெங்கடேஷ் கணிசமாக சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
அதே சம்பளத்தை ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ரீமேக்கிற்கு கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பளத்தைக் கொடுத்து உருவாக்கினால் கஷ்டமாகிவிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
மேலும், ‘த்ரிஷ்யம் 3’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் தவிர்த்து வேறு யாராலும் நடிக்கவும் முடியாது. இதனால் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது படக்குழு. விரைவில் இதற்கு சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.