'பெத்தலகேம் குடும்ப யூனிட்' படத்தின் முக்கியமான காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று படத்தின் நாயகன் நிவின் பாலி, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் படக்குழு சார்பில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘உலக அளவில் மாபெரும் வெற்றி பெற வைத்த அன்புக்கு நன்றி. திரையரங்குகளில் குவிந்து படத்தைக் கொண்டாடும் ரசிகர்களின் இந்த எதிர்பாராத அன்பில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு தாழ்மையான வேண்டுகோள். படத்தின் முக்கியமான காட்சிகளை திரை அரங்கினுள் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். படத்தின் அந்த மேஜிக்கை எல்லோரும் திரையரங்குக்கு வந்து அனுபவிக்கட்டும்.
அந்த சிறப்பான அனுபவத்தை எல்லோருக்கும் பாதுகாத்து வைத்திருங்கள். திரையரங்குகளில் சந்திப்போம். அன்புடன் பாவனா ஸ்டூடியோஸ்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் ஏ டி இயக்கத்தில் நிவின் பாலி நடித்திருக்கும் ‘பெத்தலகேம் குடும்ப யூனிட்’ படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகி திரையரங்ங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படத்தில், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.