பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது, இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார்.
அதில், கடந்த ஜன. 19-ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் வைத்து தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறிய புகாரை அடுத்து, ரஞ்சித் கைதுசெய்யப்பட்டு, எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இயக்குநர் ரஞ்சித்தை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
அதை ஏற்ற நீதிமன்றம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் அவருக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இயக்குநர் ரஞ்சித் தனது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும், பாலியல் தொல்லை நடந்ததாகக் கூறப்படும் ஃபோர்ட் கொச்சியில் உள்ள சம்பவ இடத்துக்கு செல்லக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.