சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பாபி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சிரஞ்சீவி. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இதன் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டார்.
பாபி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அனஸ்வரா ராஜன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இதில் சில முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக் கண்ணன், இசையமைப்பாளராக தமன், தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கோலா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
’ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கே.வி.என் நிறுவனம், இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் படங்கள் தயாரிக்க தொடங்கியிருக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வால்டர் வீரய்யா’ படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி – பாபி இணைந்து இப்படத்தில் பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.