‘அகண்டா 2’ படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து எழுந்த கிண்டல்களுக்கு போயபத்தி சீனு விளக்கம் அளித்துள்ளார்.
டிசம்பர் 12-ம் தேதி வெளியான படம் ‘அகண்டா 2’. இப்படத்தின் சண்டைக் காட்சிகள் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதற்கு இயக்குநர் போயபத்தி சீனு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அகண்டா 2 படம் தொடங்கும் போதே அஷ்ட சித்தி அடைவதற்காக 12 ஆண்டுகள் தவம் இருப்பதை தெளிவாக காட்டியிருப்போம். அவர் அதை அடைந்த பிறகு, ஒரு சூப்பர் ஹீரோவுக்கு இணையாக மாறிவிடுகிறார். அவர் அசாதாரணமானவர் என்பதை படத்தில் விளக்கியுள்ளோம்.
அஷ்ட சித்திகளை அடைந்த ஒரு கதாபாத்திரத்தை சித்தரிப்பதில் எந்த எல்லைக்கும் செல்ல முடியும். அப்படியிருந்தாலும், இப்படத்தில் பெரும்பாலும் ஆயுதங்களோடு சண்டையிடுவதை மட்டுமே காட்டியிருப்பொம். நிஜத்தில் அஷ்ட சித்தி அடைந்த ஒருவர் சிறிய உருவம் எடுக்கவோ, பிரம்மாண்டமாக மாறவோ சக்திகள் உள்ளன. ஆனால், அதனை எல்லாம் இப்படத்தில் பயன்படுத்தவில்லை. அவற்றை அடுத்து வரும் பாகங்களுக்காக வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் போயபத்தி சீனு.
ஆதி, சம்யுக்தா உள்ளிட்ட பலர் பாலகிருஷ்ணா உடன் நடித்துள்ள படம் ‘அகண்டா 2’. 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். தெலுங்கில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதர மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், முதல் பாகம் அளவுக்கு எந்தவொரு மொழியிலும் வரவேற்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.