‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை எந்தவொரு பொது இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என பிரபாஸுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது படக்குழு.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ‘ஸ்பிரிட்’. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பூஷன் குமார் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்து வருகிறது.
‘ஸ்பிரிட்’ படப்பூஜையில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்துக் கொண்டார். அதில் பிரபாஸ் கலந்துக் கொண்டாலும், அவரது புகைப்படங்கள் எதுவுமே வெளியிடவில்லை. இந்தப் படத்துக்காக பிரபாஸ் கெட்டப்பை மாற்றியிருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. இதனாலேயே அவரது படப்பூஜை புகைப்படம் வெளியிடப்படவில்லை.
மேலும், பிரபாஸிடம் படப்பிடிப்பு முடியும் வரை எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் விமான நிலையத்தில் கூட யாரும் புகைப்படம் எடுக்காத வண்ணம் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரபாஸ் தற்போது இருக்கும் கெட்டப் எந்தவொரு விதத்திலும் வெளியே புகைப்படமாக கசிந்துவிடக் கூடாது என்பதில் ‘ஸ்பிரிட்’ படக்குழு தீவிரமாக இருப்பது தெரிகிறது.