தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், புனேவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சமீபத்தில் மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
2020ம் ஆண்டு மருத்துவப் படிப்பைத் தொடங்கிய அவர் நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நடித்துக்கொண்டே படித்ததாகக் கூறியிருந்தார். இந்நிலையில் அவரிடம் நடித்துக்கொண்டே மருத்துவம் படித்தது எப்படி ? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறும்போது, “இது போன்ற விஷயங்களுக்கு மன வலிமையும் பொறுமையும் தேவை. விஷயங்களுக்கு இடையில் உங்கள் மனதை ‘ஆன்’ மற்றும் ‘ஆஃப்’ செய்யும் திறனும் வேண்டும். நடிப்பிலும் படிப்பிலும் கவனம் செலுத்தியதில் மகிழ்ச்சியடைந்தேன். நான் மருத்துவராக இருப்பதை விரும்புகிறேன். மருத்துவப் பாடங்களையும் விரும்பினேன். என் நேரத்தின் பெரும்பகுதியை மருத்துவம் படிப்பதிலேயே செலவிட்டேன்” என்றார்.