தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்பட சில படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகையான சமீரா ரெட்டி. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், 2013ம் ஆண்டு கன்னடப் படம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு அவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் 13 வருடங்களுக்குப் பின் அவர் மீண்டும் நடிக்கிறார். சஞ்சத் தத் நடிக்கும் ‘ஆக்ரி சவால்’ என்ற படத்தில் சமீரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் திரிதா சவுத்ரி, அமித்சாத், நமஷி சக்ரவர்த்தி, மிருணாள் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிஜீத் மோகன் வாரங் இயக்கி உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் உருவாகும் இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு திரும்பியது பற்றி பேசிய அவர், “நான் சினிமாவுக்கு மீண்டும் திரும்பியது பாதுகாப்பான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக அல்ல. ‘ஆக்ரி சவால்’ திரைப்படம் அப்படியான ஒரு படம் அல்ல. ஆர்.எஸ்.எஸ் பற்றிய எனது புரிதல் மிகக் குறைவாகவும், அரைகுறைத் தகவல்களால் உருவானதாகவும் இருந்தது.
ஆனால், இப்படத்தின் திரைக்கதையைப் படித்த பிறகு, எனக்குத் தெரிந்த பல விஷயங்கள் முரணாக இருப்பதை உணர்ந்தேன். அந்த உணர்வு என்னுள் ஆழமாகப் பதிந்தது. இப்படம் உங்களை அசைத்துப் பார்க்கும், உங்கள் நம்பிக்கைகளுக்குச் சவால் விடும், நீங்கள் உண்மையாக ஏற்றுக்கொண்ட விஷயங்களைக் கேள்வி கேட்கத் தூண்டும்.
எனது மறுபிரவேசம் அப்படி துணிச்சலான ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், விவாதங்களைத் தூண்ட வேண்டும் என்றும் விரும்பினேன்; இந்தப் படம் அதற்கு சரியானதாக அமைந்தது” என்றார். இப்படம் மே 8ம் தேதி வெளியாக இருக்கிறது.