துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இப்படத்தில் நடிக்க, தெலுங்கு நடிகை ஒருவரை காஸ்டிங் டைரக்டர் பிரசாத் என்பவர் தொடர்பு கொண்டார்.
அவர் மூலமாக அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்குச் சம்பளமாக ரூ.90 ஆயிரமும் கார் வாடகைக்காக ரூ.38 ஆயிரம் தருவதாகவும் பிரசாத் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பணத்தைத் தரவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து கேட்டபோது, கடந்த பிப்ரவரியில் ஹைதராபாத் பாஞ்சரா ஹில்ஸில் உள்ள தயாரிப்பாளர் தில் ராஜு அலுவலகத்துக்கு அருகில் வருமாறு பிரசாத் அழைத்துள்ளார். அங்கு சென்ற போது பிரசாத் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் பாலியல் ரீதியான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் தனது ஆசைக்கு இணங்கி நடந்தால் திரைத்துறையில் பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் கூறி அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
அங்கிருந்து அவர் தப்பித்து வந்துள்ளார். சில மாதங்களுக்குப் பிறகு நடிகையின் தாயார் பணம் பற்றி கேட்டபோது, பிரசாத் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பாஞ்சரா ஹில்ஸ் போலீஸில் நடிகை புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.