ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘பெத்தி’. புச்சி பாபு சானா இயக்கியுள்ள இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் ஜூன் 4-ல் வெளியாக உள்ளது. விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படத்தை ஈஷான் சக்சேனா இணை தயாரிப்பு செய்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் ராம் சரண் கூறும்போது, ”இந்தப் படத்தை முடிக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக உழைத்தோம். எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மையத் தூண். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்குப் பெரிய உத்வேகமாக இருக்கிறது. சிவ ராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும். இந்தப் படத்தை வெறும் ஒரு நடிகராகச் செய்யவில்லை. மனதார காதலித்துச் செய்தேன்” என்றார்.