பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் தமிழில், ‘கருப்பு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு ஆரம்பத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் துளியும் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“எனக்கு ஸ்மார்ட் போன் வாங்குவதில் ஆர்வம் இல்லை. ஆனால், மம்மூட்டி தான் கட்டாயப்படுத்தி அதை வாங்க வைத்தார். ‘இனிமேல் உன்னிடம் பேச வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே முடியும்’ என்று அவர் அன்போடு கட்டளையிட்டார். அவரது வற்புறுத்தலுக்குப் பிறகே முதன்முதலில் அதைப் பயன்படுத்தத் தொடங்கினேன்.
ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும், கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது எப்படி என்று இன்னும் தெரியாது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை நண்பர்கள் மற்றும் பிறரின் உதவியுடனேயே பார்த்து வருகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.