தமிழில் 'அன்பு' படம் மூலம் அறிமுகமான பாலா, 'காதல் கிசுகிசு', 'கலிங்கா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்தார். மலையாளத்தில் கவனம் செலுத்தி வரும் அவர், பாடகி அம்ருதாவை 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் விவாகரத்து பெற்றனர். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது வீட்டுக்குள், 3 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றதாக கொச்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி பாலா கூறியதாவது: நிகழ்ச்சி ஒன்றுக்காகக் கோட்டயம் சென்றிந்தேன். வீட்டில் எலிசபெத் தனியாக இருந்தார். அப்போது கஞ்சா போதையில் வந்த 3 பேர், கதவைத் தட்டி அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். பக்கத்து வீட்டிலும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகம் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.அவர்கள் கார் எண்ணையும் போலீஸில் கொடுத்துள்ளேன்.
நானும் மனைவியும் நடைபயிற்சி சென்றபோது, எங்கள் காலில், சில நாட்களுக்கு முன் 2 பேர் விழுந்தனர். அவர்கள்தான் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் என்னை கொல்ல வந்துள்ளனர். நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து பெண்ணிடம் வீரம் காட்டுவதுதான் ஆண்மையா? எலிசபெத் மருத்துவர். அவர் பயத்தில் இருக்கிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.