தான் சினிமாவிலிருந்து விலகப் போவதாக கூறியது ஜோக் என்று நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திடீர் பல்டி அடித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பெரும் வரவேற்பை பெற்றதன் மூலம் பிரபலமானவர் ராகுல் ராமகிருஷ்ணா. அப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஸ்கைலேப்’ படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா தான் திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியிருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலரும் நடிப்பிலிருந்து விலகவேண்டாம் என்று அவரிடம் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அப்பதிவில் எந்தவித சுற்றிவளைத்தலும் இன்றி நேரடியாகவே அவர் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் தான அந்தப் பதிவை விளையாட்டுக்கு பகிர்ந்ததாக திடீரென பல்டி அடித்துள்ளார் ராகுல் ராமகிருஷ்ணா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் “அது ஒரு ஜோக், முட்டாள்களே. அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, பலன்கள் நிறைந்த சொகுசான வாழ்க்கையை நான் ஏன் தூக்கி எறியப் போகிறேன்?” என்று தெரிவித்துள்ளார்.
இது அவரது ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது பதிவிலேயே அவரை திட்டித் தீர்த்து வந்தனர். இதனால் சிறிது நேரத்திலேயே அந்த இரண்டு பதிவுகளையும் ராகுல் ராமகிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார்.