தென்னிந்திய சினிமா

இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் - தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திடீர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

இனி திரைப்படங்களில் நடிக்கக் போவதில்லை என பிரபல தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு வெளியான ‘சைன்மா’ என்ற குறும்படத்தின் மூலம் தன் திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பெரும் வரவேற்பை பெற்றதன் மூலம் இவர் பிரபலமானார். அப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஸ்கைலேப்’ படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரு கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஒரு நடிகர் திடீரென சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT