தென்னிந்திய சினிமா

மீண்டும் இயக்குநராகும் சுதீப்: நாயகனாக சல்மான்கான்?

செய்திப்பிரிவு

நடிகர் சுதீப் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவுள்ளார். இதில் இந்தியில் நாயகனாக சல்மான்கான் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுதீப். கன்னடத்தில் நாயகனாக நடித்துவரும் சுதீப், இதர மொழிகளில் முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'தபாங் 3' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் சல்மான் கான் - சுதீப் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளது.

தற்போது சுதீப் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவுள்ளார். தனது புதிய படத்திற்கான கதை, திரைக்கதையை கரோனா ஊரடங்கு சமயத்தில் முழுமையாகத் தயார் செய்து முடித்துவிட்டார். இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் அவரே நாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.

இந்தியில் மட்டும் சல்மான்கானை நடிக்கவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் இந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமிழில் பெரும் வெற்றி பெற்ற 'ஆட்டோகிராப்', 'சிங்கம்' உள்ளிட்ட பல படங்களின் கன்னட ரீமேக்குகளை இயக்கி, நாயகனாக சுதீப் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT