தன் மீதான நாகபாபுவின் விமர்சனத்துக்கு பிரகாஷ்ராஜ் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் மாநகராட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டால் பவன் கல்யாணைக் கடுமையாக விமர்சித்தார் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ்ராஜின் கருத்துகள் தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பவன் கல்யாணின் சகோதரர் நாகபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதமொன்றை வெளியிட்டார்.
அதில், "ஜிஹெச்எம்சி தேர்தலில் எங்கள் தலைவர் பவன் கல்யாண் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும் என நம்புகிறேன். பிரகாஷ்ராஜின் அரசியல் அறிவை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புரிந்துகொண்டு விட்டார். அந்த விவாதத்தில் பிரகாஷ் ராஜின் நாக்கு கட்டுண்டதைப் போல இருந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. உங்கள் பார்வையில் பாஜகவின் முடிவுகள் சரியில்லை என்றால் அதை விமர்சிப்பது சரியே.
ஆனால், நல்ல விஷயங்களைப் பாராட்டக்கூடாது என்கிற உங்கள் நோக்கத்தைப் பற்றி என்ன சொல்ல? ஜனசேனா கட்சியுடன் இந்த மாநிலத்தை வளர்ச்சி பெறச் செய்ய பாஜகவால் முடியும். உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள் எவ்வளவு பேர் முயன்றாலும் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது.
நீங்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு சித்திரவதை தந்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்துக்காக அவர்களை அல்லல் படவைத்து, தேதிகள் கொடுத்து அதை ரத்து செய்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். முதலில் பவன் கல்யாணைப் பற்றிப் பேசுவதற்கு முன் நாம் இருவரும் பேசுவோம்" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார் நாகபாபு.
நாகபாபுவின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் விதமாக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மதிப்பிற்குரிய நாகபாபு, உங்கள் இளைய சகோதரர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பு எனக்குப் புரிகிறது. என் தேசத்தின் மீது எனக்கிருக்கும் அன்பு உங்களுக்குப் புரிகிறது. என்னால் தெலுங்கு பேச முடியும். ஆனால், உங்கள் 'மொழி'யில் பேச முடியாது".
இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.