நானி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ப்ரோசேவாரெவருரா'. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஸ்ரீவிஷ்ணு, நிவேதா தாமஸ், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தற்போது விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நானி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவருடைய நடிப்பில் உருவாகும் 28-வது படமாகும்.
இந்தப் படத்தின் நாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் 'ட்ரான்ஸ்' படத்தில் மட்டுமே நஸ்ரியா நடித்திருந்தார்.
திருமணத்துக்குப் பிறகு மற்றொரு நாயகனுக்கு நாயகியாக நஸ்ரியா நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
நவம்பர் 21-ம் தேதி இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.