தென்னிந்திய சினிமா

பிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

பிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பாடகராக அறியப்பட்டவர் ஸ்மிதா. பின்பு அவருடைய குரலுக்கு பாப் பாடல் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் கூறியதால், அதில் கவனம் செலுத்திப் பிரபலமானார்.

2000-ம் ஆண்டில் 'ஹாய் ராப்பா' என்ற பாப் ஆல்பத்தை வெளியிட்டார் ஸ்மிதா. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு ஆல்பங்களில் பாடி பிரபலமானார். இந்தியிலும் இவருடைய பாடல்கள் உருவாகியுள்ளன.

2004-ம் ஆண்டு உருவான 'மல்லீஸ்வரி', 2007-ம் ஆண்டு உருவான 'ஆட்டா' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாகவும் அறியப்பட்டவர் ஸ்மிதா. இவருக்கு நேற்று (ஆகஸ்ட் 4) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ஸ்மிதா கூறியிருப்பதாவது:

"நேற்று மோசமான நாள். நேற்று உடலில் வலி ஏற்பட்டது. கடுமையாகச் செய்த உடற்பயிற்சியால் வலி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கும் சஷாங்குக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் பெரிதாக இல்லை. கரோனாவை விரட்டி, பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் பாதுகாப்பாக வீட்டில்தான் இருந்தோம். ஆனாலும், கரோனா எங்களைத் தேடி வந்துவிட்டது".

இவ்வாறு ஸ்மிதா தெரிவித்துள்ளார்.

ஸ்மிதாவின் இந்தப் பதிவுக்குப் பிறகு அவருடைய இசையுலக நண்பர்கள் பலரும் அவர் பூரண நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT